இந்திய ரயில்வே துறையில் அதிநவீன வசதிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் மற்றும் சாமானிய மக்களுக்கான அம்ரித் பாரத் ரயில்களில் இனி 'அவசர கால இட ஒதுக்கீடு' (Emergency Quota/VIP Quota) அமல்படுத்தப்பட உள்ளது. அவசரத் தேவைக்காகப் பயணிக்கும் பயணிகளுக்கு உதவும் நோக்கில் இந்த முக்கிய முடிவை ரயில்வே வாரியம் எடுத்துள்ளது. குறிப்பாக, ஏழு அல்லது அதற்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகளுடன் இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில்களில், சுமார் 24 இருக்கைகள் இந்த அவசர ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படும்.
இதன் மூலம் ஹவுரா - ஆனந்த் விஹார் போன்ற முக்கிய வழித்தடங்களில் பயணிக்கும் பயணிகளுக்குச் சீட் கிடைப்பதில் இருந்த சிக்கல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் புதிய நடைமுறை
விரைவில் அறிமுகமாகவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில், பயணிகளின் கூட்டத்தைப் பொறுத்து அவசர கால ஒதுக்கீட்டு இடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சாதாரண வார நாட்களை விட, வார இறுதி நாட்களில் (Weekends) கூடுதல் இருக்கைகள் இந்த ஒதுக்கீட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
முதல் வகுப்பு ஏசி: சாதாரண நாட்களில் 4, வார இறுதியில் 6 இருக்கைகள்.
இரண்டாம் வகுப்பு ஏசி: சாதாரண நாட்களில் 20, வார இறுதியில் 30 இருக்கைகள்.
மூன்றாம் வகுப்பு ஏசி: சாதாரண நாட்களில் 24, வார இறுதியில் 42 இருக்கைகள். பயணிகள் இந்த இடங்களை முன்பதிவு காலம் முடிவடைவதற்கு முன்பாகவே உரிய விதிமுறைகளின்படி பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப ஒதுக்கீட்டில் மாற்றம்
இந்த அவசர கால இட ஒதுக்கீடு என்பது நிலையானது அல்ல; அந்தந்த பகுதிகளில் உள்ள ரயில்களின் தேவை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இதனை மாற்றியமைக்கும் அதிகாரத்தை மண்டல ரயில்வேக்களுக்கு ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.
மற்ற எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களைப் போலவே, வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களிலும் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த விஐபி கோட்டா இருக்கைகளின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்படும். இந்திய ரயில்வேயின் இந்த அதிரடி மாற்றத்தால், கடைசி நேரத்தில் அவசரமாகப் பயணிக்கும் பயணிகள் பெரும் பயனடைவார்கள்.
