கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, அசாமில் அதிகபட்சமாக 75.91 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 72.40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. கேரளாவைப் பொறுத்தவரை 62.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அதேபோல், கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள சில தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் நிழற்குடைகள் மற்றும் குடிநீர் வசதிகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே மாதம் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
