மேற்குவங்க மாநிலம் கோசாய்பூரில் நடைபெற்ற சந்தாலி பழங்குடியின மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, அந்த மாநில அரசு முறைப்படி வரவேற்காமல் அவமதித்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடியரசுத் தலைவரை திரிணமூல் காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது என்றும், இது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அவமானம் என்றும் சாடினார். அதிகாரத் திமிரில் மது போதையில் இருப்பவர்கள் போலச் செயல்படும் இத்தகைய அரசியல் சக்திகள் விரைவில் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள் என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
முன்னதாக, பாக்டோக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கிய குடியரசுத் தலைவரை வரவேற்க மாநில முதல்வரோ அல்லது அமைச்சர்களோ வராதது சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலிகுரி மேயர் மட்டுமே அங்கு வந்திருந்த நிலையில், மாநாட்டு மேடையிலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்திய குடியரசுத் தலைவர் முர்மு, மாநில அரசின் மரபுப்படி ஏன் எவரும் தன்னை வரவேற்க வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும், மாநாடு நடைபெறவிருந்த இடத்தை மம்தா அரசு கடைசி நேரத்தில் மாற்றியதையும் அவர் சுட்டிக்காட்டினார். முதல்வர் மம்தா தனக்குத் தங்கை போன்றவர் எனக் குறிப்பிட்ட முர்மு, இடமாற்றம் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தில் மேற்குவங்க அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்றும் தனது உரையில் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
