டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (NCR) போக்குவரத்து இணைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், 82 கி.மீ நீளமுள்ள டெல்லி–மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (RRTS) மற்றும் 23 கி.மீ நீளமுள்ள மீரட் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் டெல்லி மற்றும் மீரட் இடையேயான பயண நேரம் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைய உள்ளது.
ஒரே தண்டவாளத்தில் மெட்ரோ மற்றும் நமோ பாரத்!
இந்தியாவிலேயே முதல் முறையாக, பிராந்திய விரைவு ரயிலான 'நமோ பாரத்' மற்றும் மீரட் மெட்ரோ ஆகிய இரண்டுமே ஒரே தண்டவாளத்தில் இயங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மீரட் மெட்ரோ, சுமார் 120 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்தியாவின் அதிவேக மெட்ரோ சேவையாகும். இது ஒட்டுமொத்த மீரட் நகரத்தையும் வெறும் 30 நிமிடங்களில் கடக்கும் திறன் கொண்டது.
பயணிகளுடன் உரையாடிய பிரதமர்!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பிரதமர் மோடி, சதாப்தி நகர் முதல் மீரட் தெற்கு வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது ரயிலில் இருந்த பயணிகளுடன் அவர் கலந்துரையாடினார். நமோ பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் இந்த பிரம்மாண்ட திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு விரிவாக விளக்கமளித்தனர்.
ரூ.12,930 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள்!
இந்த விழாவிற்கு முன்பாக, காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமரை முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். தொடர்ந்து மீரட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ரயில்வே மற்றும் போக்குவரத்து தொடர்பான சுமார் 12,930 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதிவேகமும் தொழில்நுட்பமும்!
RRTS வேகம்: அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது (இயக்க வேகம் 160 கி.மீ).
முக்கிய நிலையங்கள்: சாகிபாபாத், காசியாபாத், மோடிநகர் வழியாக டெல்லி மற்றும் மீரட்டை இணைக்கிறது.
மீரட் மெட்ரோ: 23 கி.மீ தூரம், 13 நிலையங்கள். இதில் மீரட் தெற்கு, சதாப்தி நகர், பேகம்பூர் மற்றும் மோடிபுரம் ஆகிய நிலையங்களில் பயணிகள் மெட்ரோவிலிருந்து RRTS ரயிலுக்கு மாறிக் கொள்ளலாம்.