ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (மார்ச் 16) அதிகாலை எதிர்பாராத விதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஏற்பட்ட இந்த விபத்தில், அங்கு சிகிச்சையில் இருந்த 10 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஐந்து நோயாளிகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்தவுடன் மற்ற நோயாளிகள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரிவான சட்ட ரீதியான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் நேரில் ஆய்வு
தீ விபத்து நடந்த இடத்திற்கு ஒடிசா முதல்வர் மோகன் மாஜி நேரில் சென்று, மீட்கப்பட்ட நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குச் சிறந்த முறையில் உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
