சவுதி அரேபியாவின் அல்கார்ஜ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதில் ஈரான் ஏவிய ஏவுகணைகளில் ஒன்று, இலக்கு தவறி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மீது விழுந்து பயங்கரமாக வெடித்தது. இந்த கோர விபத்தில் அந்த குடியிருப்பில் இருந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.
இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை
தாக்குதல் நடந்த அந்த குடியிருப்பில் இந்தியத் தொழிலாளர்களும் தங்கியிருந்ததால், அவர்கள் நிலை குறித்த அச்சம் நிலவியது. இது தொடர்பாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளது. காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.