பிஹார் முதல்வராக சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றி சாதனை படைத்த நிதிஷ் குமார், தற்போது மத்திய அரசியலில் கால்பதிக்கும் விதமாக மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். புதுடெல்லியில் நடைபெற்ற எளிய விழாவில், மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தி மொழியில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய அரசியலுக்குச் செல்லும் முடிவை முன்னெடுத்து, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமார், சமீபத்தில் தனது சட்ட மேலவை உறுப்பினர் (MLC) பதவியைத் துறந்தார். தற்போது எம்.பி.யாகப் பொறுப்பேற்றுள்ளதன் மூலம், பிஹார் மாநிலத்தில் அவரது நீண்டகால முதல்வர் பதவி முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து, பிஹார் மாநிலத்திற்கான புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வரும் ஏப்ரல் 14-ம் தேதி புதிய முதல்வர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
