பீகார் அரசியலில் நீண்டகாலமாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய நிதிஷ்குமார், இன்று (மார்ச் 5, 2026) தனது முதலமைச்சர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். மாநில ஆளுநரைச் சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 2005-ஆம் ஆண்டு முதல் பீகாரை வழிநடத்தி வந்த அவர், இப்போது மாநில அரசியலில் இருந்து விடைபெற்று தேசிய அரசியலில் தடம் பதிக்கத் தயாராகிவிட்டார். மாநிலங்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் (JDU) சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள உள்ளார்.
பீகாரின் முதல் பாஜக முதல்வர்?
நிதிஷ்குமாரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, பீகாரில் முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இதற்கான ஆலோசனையில் ஈடுபட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பாட்னா வந்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்களான சாம்ராட் சவுத்ரி அல்லது நித்யானந்த் ராய் ஆகியோரில் ஒருவர் புதிய முதல்வராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் பீகார் வரலாற்றில் ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்குகிறது.
துணை முதல்வராக நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த்
இந்த அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், நிதிஷ்குமாரின் ஒரே மகனான நிஷாந்த் குமார் இன்று முறைப்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அவருக்குப் புதிய அமைச்சரவையில் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆன்மீகம் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஆர்வம் காட்டி வந்த நிஷாந்த், தற்போது தனது தந்தையின் அரசியல் வாரிசாகக் களமிறக்கப்பட்டுள்ளார். வாரிசு அரசியலை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த நிதிஷ்குமார், தனது அரசியல் ஓய்வு காலத்தில் மகனை முன்னிறுத்துவது பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
