உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்றபோது சமூக வலைதளங்களில் வைரலாகி இந்தியா முழுவதும் பிரபலமானவர் மோனாலிசா போஸ்லே. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவரும், நடிகர் ஃபர்மான் கானும் காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 11-ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை ‘லவ் ஜிகாத்’ என மோனாலிசாவின் பெற்றோர் சாடியதுடன், தனது மகள் கடத்தப்பட்டதாகப் புகார் அளித்திருந்தனர். ஆனால், தான் 18 வயது பூர்த்தியானவர் என்றும், தனது விருப்பப்படியே திருமணம் செய்ததாகவும் மோனாலிசா அப்போது தெரிவித்திருந்தார்.
விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (NCST) நடத்திய அதிரடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. திருமணத்தின் போது மோனாலிசாவுக்கு 18 வயது ஆகிவிட்டதாகக் காண்பிக்கப் போலியான பிறப்புச் சான்றிதழ் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உண்மையான பிறந்த தேதியின்படி (டிசம்பர் 30, 2009), திருமணத்தின் போது மோனாலிசாவுக்கு 16 வயது மட்டுமே ஆகிறது என்பதும், அவர் சட்டப்படி ஒரு மைனர் சிறுமி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாயும் சட்ட நடவடிக்கைகள்
இதனைத் தொடர்ந்து, மைனர் சிறுமியைத் திருமணம் செய்ததற்காக ஃபர்மான் கான் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர் மீது கிரிமினல் வழக்குகள் பாய்ந்துள்ளன. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திருமணம் தற்போது சட்ட ரீதியான சிக்கல்களில் முடிந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
