மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள போர்சர் கிராம பஞ்சாயத்து, பொதுமக்களிடையே நற்பண்புகளை வளர்க்கவும், அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்கவும் ஒரு வினோதமான விதியை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, பொது இடங்களில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்கள் ஒரு மணி நேரம் கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றத்திற்கு வித்திட்ட இளைஞரின் யோசனை
இந்தத் திட்டம் குறித்துப் பேசிய துணைத் தலைவர் வினோத் ஷிண்டே, கிராமத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் தரக்குறைவாகப் பேசுவதும், குறிப்பாகப் பெண்களை இழிவுபடுத்தும் விதமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அஸ்வின் பாட்டில் என்ற இளைஞரின் இந்த யோசனையை கிராம பஞ்சாயத்து ஒருமனதாக ஏற்று, கிராமம் முழுவதும் இது குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.
ஆரம்பத்திலேயே கிடைத்த நற்பலன்கள்
இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்த சில நாட்களிலேயே கிராமத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "முன்பெல்லாம் பெற்றோர்கள் எச்சரித்தாலும் குழந்தைகள் தகாத வார்த்தைகளை விளையாட்டுத்தனமாகப் பேசுவார்கள். ஆனால், இப்போது அபராதம் மற்றும் தண்டனைக்கு பயந்து அனைவரும் கவனமாகப் பேசுகிறார்கள்" என்று கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 'வசையற்ற கிராமம்' (Abuse-Free Village) என்ற இந்த முயற்சிக்கு அண்டை கிராமங்களிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
