கேரள மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ‘தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ திரைப்படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லருக்கு கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இயக்குநர் கமக்யா நாராயண் சிங் இயக்கத்தில், உல்கா குப்தா, அதிதி பாடியா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், அதன் டிரெய்லரில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. குறிப்பாக, இளம்பெண் ஒருவரைச் சிலர் கட்டாயப்படுத்தி மாட்டு இறைச்சி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கியதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன், கலை விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாகத் தலையிடுவதில்லை என்றாலும், உண்மைச் சம்பவங்கள் என்ற பெயரில் ஒரு மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதையும், வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டுவதையும் வேடிக்கை பார்க்க முடியாது என்று குறிப்பிட்டார். மேலும், இந்தப் படம் மத்திய அரசின் விதிமுறைகளின்படி எடுக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாகவும், அதுவரை இப்படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர்களை வெளியிடத் தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டார்.
