உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று 25 வயது இளம் வழக்கறிஞர் ஒருவர், ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியான்ஷு ஸ்ரீவஸ்தவா என அடையாளம் காணப்பட்ட அந்த வாலிபர், தனது தற்கொலைக்குத் தந்தையின் அதீத கண்டிப்பும், சிறுவயது முதல் அனுபவித்த மன உளைச்சலுமே காரணம் என வாட்ஸ்அப்பில் நீண்ட கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
"கடவுள் இப்படி ஒரு தந்தையை யாருக்கும் கொடுக்கக் கூடாது"
சம்பவத்திற்கு முன்னதாக பிரியான்ஷு தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இரண்டு பக்க தற்கொலை கடிதத்தை பதிவேற்றியுள்ளார். அதில், "கடவுள் எனக்கு வாய்த்தது போன்ற ஒரு தந்தையை யாருக்கும் கொடுக்கக் கூடாது. எனது உடலை அவர் தொடக்கூடக் கூடாது" எனத் தனது தந்தையின் மீதுள்ள கடும் கோபத்தையும் மனக்காயத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தனது சிறுவயது அனுபவங்கள் குறித்துப் பதிவிட்டுள்ள அவர், தனக்கு ஆறு வயதாக இருந்தபோது, அனுமதி இன்றி மாம்பழச் சாறு குடித்ததற்காகத் தந்தை தனது உடைகளை உரிந்து வீட்டை விட்டு வெளியே துரத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற தொடர்ச்சியான அவமானங்களும், தாழ்வு மனப்பான்மையும் தன்னை இந்த நிலைக்குத் தள்ளியதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் பணிச் சூழலில் ஏற்பட்ட நெருக்கடி
வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தாலும், தனது தந்தைக்கே கீழ் பணிபுரிவதால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2025-ல் எல்.எல்.பி முடித்தும் சில சட்டத் தேர்வுகளில் வெற்றி பெற முடியாமல் போனது, நிதி நெருக்கடி மற்றும் நோயுற்ற தந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு போன்றவை அவருக்குப் பெரும் சுமையாக இருந்துள்ளன. பள்ளிப் பருவத்தில் உடற்கல்விக்கு (Physical Education) பதிலாகக் கணினிப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கத் தந்தை மிரட்டி வற்புறுத்தியது முதற்கொண்டு, தனது விருப்பத்திற்கு மாறாகவே வாழ்க்கை அமைந்ததாக அவர் குமுறியுள்ளார்.
காவல்துறை விசாரணை
பிரியான்ஷுவின் தற்கொலையைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கான்பூர் கிழக்கு டிசிபி சத்யஜீத் குப்தா மற்றும் கமிஷனர் ரகுபீர் லால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். பிரியான்ஷுவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் உள்ள டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம், வழக்கறிஞராக இருக்கும் அவரது தந்தை தற்போது கடும் அதிர்ச்சியில் இருப்பதால் அவரிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல... மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் அதிகரித்தாலோ, அதிலிருந்து விடுபட உடனே தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்)
