ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர், இந்தியாவிற்குள் எவ்விதமான சட்டம்-ஒழுங்கு பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு மிகத் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக, கடந்த பிப்ரவரி 28-ம் தேதியிட்ட ரகசியக் கடிதம் ஒன்றை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. சர்வதேச அளவில் நடக்கும் இந்தத் துயரச் சம்பவங்கள், உள்நாட்டில் மத மோதல்களையோ அல்லது வன்முறையையோ தூண்டிவிடக்கூடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தீவிரக் கண்காணிப்பில் சமூக வலைதளங்கள்
மாநில அரசுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையில் ஈரானுக்கு ஆதரவாகப் பேசும் தீவிரப் பேச்சாளர்களைக் கண்டறிந்து அவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சமூக ஊடகக் கணக்குகளைக் கண்காணிக்க வேண்டும். வன்முறையைத் தூண்டும் பதிவுகள் அல்லது வீடியோக்கள் பரவுவதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். சர்வதேச விவகாரங்களால் நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
தூதரகங்களுக்கு ராணுவப் பாதுகாப்பு
குறிப்பாக, இந்தியாவிலுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் மற்றும் அந்த நாடுகளோடு தொடர்புடைய வணிக நிறுவனங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காஷ்மீர் போன்ற பகுதிகளில் ஷியா பிரிவினர் கமேனியின் மறைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கப் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
