அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்க்காலச் சூழலில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்த நீட்டிப்பை இந்தியா முழுமனதாக வரவேற்றுள்ளது. இது குறித்துப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியா எப்போதுமே உலகளாவிய அமைதிக்கு ஆதரவான நாடு என்பதை உறுதிப்படுத்தினார். மேற்காசியப் பகுதியில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையால் சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமே இந்த மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தடையற்ற கப்பல் போக்குவரத்து நடைபெறுவதை உறுதி செய்வது உலகப் பொருளாதாரத்திற்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ட்ரம்ப்பின் அறிவிப்பும் ஈரானின் நிபந்தனையும்
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய நேரப்படி இன்று காலை ஈரான் உடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அமைதி ஒப்பந்தம் குறித்த ஒருங்கிணைந்த திட்டத்தை ஈரான் முன்வைக்கும் வரை இந்த அவகாசம் தொடரும் எனக் கூறியுள்ள அவர், அதே சமயம் ஈரான் துறைமுகங்களில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்டு வரும் முற்றுகைப் பணிகள் தொடரும் என்றும் அதிரடியாகத் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்தத் தாக்குதல்கள் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைய இருந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ட்ரம்ப் நீட்டித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஐ.நா-விற்கான ஈரான் தூதர் அமீர் சயீத் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, முற்றுகை விலக்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
