அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவுக்கு, இந்திய அரசு இன்று தனது முதல் அதிகாரப்பூர்வ எதிர்வினையை ஆற்றியுள்ளது. டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கமேனியின் மறைவுக்காக வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் இந்திய அரசு சார்பில் கையெழுத்திட்டார். மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தொடங்கியதில் இருந்தே அமைதி காத்து வரும் இந்தியா, வன்முறையைக் கைவிட்டு இருதரப்பும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தி வந்தது. கமேனி கொல்லப்பட்ட விவகாரத்திலும், அமெரிக்க-இஸ்ரேல் நடவடிக்கையைச் சர்வதேச விதிமீறல் என்று கண்டித்த நாடுகளின் பட்டியலில் இணையாமல் இந்தியா மிக கவனமாகத் தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிரடித் தாக்குதல்
கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் ஈரானின் அதிகார மையமாகத் திகழ்ந்த 86 வயதான அலி கமேனி, கடந்த சனிக்கிழமை அதிகாலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் முதன்முதலில் உறுதிப்படுத்தினார். "வரலாற்றின் மிகக் கொடிய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார்; இது ஈரான் மக்களுக்குக் கிடைத்துள்ள நீதி மட்டுமல்ல, கமேனியால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கும் உலக நாடுகளுக்கும் கிடைத்த நீதி" என்று ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் கொண்டாடி வரும் நிலையில், ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்க இது ஒரு நல்வாய்ப்பு என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச நாடுகளின் எதிர்வினை
கமேனியின் மறைவு உலக நாடுகளிடையே இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலைச் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உடனடியாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்தியா தனது நீண்டகால உறவு மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, கண்டனங்களைத் தவிர்க்கும் அதே வேளையில், தூதரக ரீதியிலான மரியாதையை மட்டும் வெளிப்படுத்தியுள்ளது.
