இமாச்சலப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு அம்மாநில அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சஞ்சய் குப்தா புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். இதன்படி, அரசு ஊழியர்கள் கண்ணியமான மற்றும் தொழில்முறை சார்ந்த ஃபார்மல் உடைகளை மட்டுமே அணிய வேண்டும். ஆண்கள் காலர் வைத்த சட்டை மற்றும் பேன்ட் அணிய வேண்டும் என்றும், பெண்கள் புடவை, சுரிதார் அல்லது துப்பட்டாவுடன் கூடிய குர்தா போன்ற உடைகளை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்குச் செல்லும்போதும், அலுவலகப் பணிகளின் போதும் எக்காரணம் கொண்டும் கேஷுவல் அல்லது பார்ட்டி உடைகளை அணிய அனுமதி இல்லை.
ஆடைக் கட்டுப்பாடு மட்டுமன்றி, சமூக ஊடகப் பயன்பாட்டிலும் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசு ஊழியர்கள் தங்களுடைய தனிப்பட்ட சமூக வலைதளக் கணக்குகளில் அரசின் கொள்கைகள் பற்றியோ அல்லது அரசியல் மற்றும் மத ரீதியான கருத்துக்களையோ பகிரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மேடைகள் மற்றும் வலைப்பதிவுகளிலும் இத்தகைய கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்த விதிகளை மீறும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இமாச்சலப் பிரதேச அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
