கடந்த 13 ஆண்டுகளாக நினைவற்ற நிலையில் (Coma) இருந்த 32 வயது இளைஞர் ஹரீஷ் ராணாவிற்கு, 'கண்ணியமான மரணத்தை' (Passive Euthanasia) தழுவ இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் நீதிமன்ற உத்தரவு மூலம் இத்தகைய அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஹரீஷ் இனி ஒருபோதும் குணமடைய வாய்ப்பில்லை என்றும், அவருக்குக் குழாய்கள் மூலம் உணவு மற்றும் திரவங்கள் வழங்கி உயிரைத் தக்கவைப்பது அவரது வலியை நீட்டிப்பதே ஆகும் என்ற மருத்துவக் குழுவின் கருத்தை ஏற்று நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது.
கண்ணீர் மல்க விடைபெற்ற குடும்பத்தினர்
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஹரீஷ் ராணா டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் நோய்த்தடுப்பு பராமரிப்புப் பிரிவுக்கு (Palliative Care) மாற்றப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு முன்னதாக, அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க அவருக்கு விடை கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரம்மா குமாரிகள் அமைப்பைச் சேர்ந்த சகோதரி லவ்லி என்பவர் ஹரீஷின் நெற்றியை வருடி, "எல்லோரையும் மன்னித்துவிடு, எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்... அமைதியாகப் போய் வா" என்று உருக்கமாகக் கூறுவது பார்ப்பவர் நெஞ்சை உலுக்குகிறது. 2013-ல் சண்டிகரில் படித்துக் கொண்டிருந்தபோது மாடியிலிருந்து விழுந்ததில் ஹரீஷின் மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கடந்த 13 ஆண்டுகளாக அவரால் கண் சிமிட்டவும், விழுங்கவும் மட்டுமே முடிந்தது.
தந்தையின் உருக்கமான பதிவு
இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசிய ஹரீஷின் தந்தை, "எனது மகனின் செயற்கை சுவாசக் குழாய்களை அகற்றுவது எங்கள் குடும்பத்திற்கு எந்தத் தனிப்பட்ட நன்மையையும் தந்துவிடாது. ஆனால், இதே போன்ற துயரமான நிலையில் இருக்கும் மற்ற குடும்பங்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு வழிகாட்டியாக அமையும்" என்று மனவேதனையுடன் தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் இன்னும் சில வாரங்களில் ஹரீஷின் உயிர்காக்கும் கருவிகளை அகற்றும் பணிகளைத் திட்டமிட்டபடி மேற்கொள்ள உள்ளனர்.