ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நிலவி வரும் வான்வழித் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் போர் சூழல் தீவிரமடைந்துள்ளது. இருதரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால், வான்வெளிப் பாதுகாப்பு கருதி விமான சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர்.
இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியில், வான்வெளிப் போக்குவரத்து மெல்ல சீரடையத் தொடங்கியுள்ளது. அதன்படி, துபாயிலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு விமானம் நேற்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் வந்த 149 பயணிகளையும், அவர்களது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க வரவேற்றனர். இதேபோல் அபுதாபியிலிருந்து கிளம்பிய மற்றொரு விமானம் மும்பையில் பத்திரமாகத் தரையிறங்கியது. போர் மேகங்கள் சூழ்ந்த பகுதியில் இருந்து மீண்டு வந்த பயணிகள், வானில் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படுவதை நேரில் கண்டதாக தங்களது அதிர்ச்சிகரமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இதற்கிடையே, சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் சிக்கியுள்ளவர்களை மீட்க 10 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்கிய இந்திய அரசு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் துபாய் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
