உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த இளம் ஜோடி ஒன்று, தங்களது திருமண வாழ்வை சுடுகாட்டில் தொடங்கி ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வழக்கமாகத் திருமணங்கள் பிரம்மாண்டமான மண்டபங்களிலோ அல்லது புனிதமான கோவில்களிலோ நடைபெறுவதே வழக்கம். ஆனால், எதார்த்தத்திற்கு மாறாகத் தங்களது திருமண வைபவம் மிகவும் வித்தியாசமாகவும், த்ரில் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று இந்த ஜோடி திட்டமிட்டது. இதற்காக அவர்கள் திருமண மண்டபங்கள் மற்றும் பொது இடங்களைத் தவிர்த்துவிட்டு, சுடுகாட்டைத் தேர்வு செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆற்றங்கரை சுடுகாட்டில் நடந்த விசித்திரத் திருமணம்
தங்களது வினோத ஆசையை நிறைவேற்ற அந்த ஜோடி, அண்டை மாநிலமான உத்தரகாண்டிற்குப் பயணம் மேற்கொண்டது. அங்குள்ள அல்மோரா மாவட்டத்தில், ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் சுடுகாட்டைத் திருமண இடமாக அவர்கள் முடிவு செய்தனர். எரியும் சிதைகளுக்கு மத்தியில், சுடுகாட்டின் மையப்பகுதியில் நின்று அந்த ஜோடி மாலை மாற்றிக் கொண்டு தங்களது வாழ்நாள் ஒப்பந்தத்தைத் தொடங்கினர். இந்த விசித்திரத் திருமணத்தைக் காண மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் தரப்பில் இருந்து சுமார் 50 விருந்தினர்கள் வருகை தந்து சாட்சியாக நின்றனர். சுடுகாட்டில் மங்கல இசை முழங்க நடைபெற்ற இந்தத் திருமண வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
