ஹைதராபாத்திலிருந்து ஹுப்பள்ளிக்குச் சென்ற ஃப்ளை91 (Fly91) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, மோசமான வானிலையில் சிக்கி சுமார் நான்கு மணிநேரம் வானிலேயே வட்டமடித்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம் 3 மணியளவில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட IC3401 (ATR ரகம்) விமானம், மாலை 4:30 மணிக்கு ஹுப்பள்ளியில் தரையிறங்க வேண்டியிருந்தது. ஆனால், ஹுப்பள்ளிக்கு அருகே சென்றபோது வானிலை மோசமடைந்ததால், விமானிகளால் திட்டமிட்டபடி தரையிறக்க முடியவில்லை.
கண்ணீரும் அலறலும்: வைரலாகும் வீடியோ
விமானம் மோசமான வானிலையில் சிக்கி குலுங்கியபோது, உள்ளே இருந்த பயணிகள் மரண பயத்தில் அலறத் தொடங்கினர். இது தொடர்பான வீடியோவில், பெண் பயணி ஒருவர் கைகளைக் கூப்பி அழுதபடி பிரார்த்தனை செய்வதும், அவரது உடல் பயத்தில் நடுங்குவதும் பதிவாகியுள்ளது. "கடவுளே... ஏன் இப்படி ஆகிறது?" என்ற பயணிகளின் கூச்சலும், "அழாதே... ஒன்றும் ஆகாது, பொறுமையாக இரு" என்று சக பயணிகள் ஆறுதல் கூறும் குரல்களும் அந்த வீடியோவில் கேட்கின்றன. முண்டகோட், தாவணகெரே மற்றும் ஷிவமோகா ஆகிய பகுதிகளுக்கு மேலே சுமார் நான்கு மணிநேரம் அந்த விமானம் வானிலேயே வட்டமடித்தது.
விமானிகளிடம் பயணிகள் வைத்த கோரிக்கை
விமானத்தின் குலுக்கலால் பீதியடைந்த பயணிகள், ஹுப்பள்ளியில் தரையிறங்க முயற்சிப்பதைத் தவிர்த்து பெங்களூரு அல்லது அருகிலுள்ள பெலகாவிக்கு விமானத்தைத் திருப்புமாறு விமானிகளிடம் கோரிக்கை விடுத்தனர். "நாங்கள் காத்திருக்கிறோம், பொறுமையாக இருங்கள்" என்று விமானி அறிவுறுத்தியும், பயணிகள் கடும் அச்சத்திலேயே இருந்தனர். இதற்கிடையே, விமான நிறுவனம் சரியான தகவல்களை வழங்கவில்லை என்றும், அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் பயணிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விமான நிறுவனத்தின் விளக்கம்
இந்தச் சம்பவம் குறித்து ஃப்ளை91 ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமானத்தில் எவ்விதத் தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படவில்லை. மோசமான வானிலை காரணமாகவே தரையிறக்க முடியாமல் போனது. பாதுகாப்பு விதிமுறைகளின்படி (Standard Operating Procedure) விமானம் பெங்களூருவுக்குத் திருப்பி விடப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது. இறுதியில், பல முயற்சிகளுக்குப் பிறகு அந்த விமானம் இரவு 7:30 மணியளவில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
