ஃபரிதாபாத்தில் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, 18 மாதமே ஆன தனது பச்சிளம் பெண் குழந்தையைத் தாயே உயிருடன் கால்வாயில் வீசிக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது ஆறு பெண் குழந்தைகளையும் வளர்க்க வசதி இல்லாததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கைதான தாய் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவல்
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி, ஃபரிதாபாத்தின் பல்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 'புதியா நாலா' என்ற கால்வாயில் ஒரு குழந்தையின் உடல் இரும்பு வலையில் சிக்கிக்கொண்டிருப்பதை பள்ளி மாணவர்கள் இருவர் கவனித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டனர். விசாரணையில், அந்தக் குழந்தை உயிருடன் இருக்கும்போதே கால்வாயில் வீசப்பட்டது தெரியவந்தது. இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிய தாய்
இந்தக் கொலை குறித்து குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்வதும், சிறிது நேரத்தில் குழந்தை இல்லாமல் அவர் மட்டும் திரும்பி வருவதும் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில், பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த நீலம் என்ற பெண்ணைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
வறுமையே காரணம் என வாக்குமூலம்
கைதான நீலம் தனது கணவர் சஞ்சய்யுடன் ஃபரிதாபாத்தில் உள்ள தீரஜ் நகர் பகுதியில் ஒரு குடிசையில் வசித்து வருகிறார். அவருக்கு மொத்தம் ஆறு பெண் குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே குடும்பம் கடுமையான பண நெருக்கடியில் இருந்த நிலையில், ஆறாவது குழந்தையை வளர்க்கத் தேவையான வசதி இல்லாததால், அக்குழந்தையை கால்வாயில் வீசியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
