நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ராகுல் காந்தி ஆற்றிய உரை பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இன்று (பிப். 12) அவருக்கு எதிராக பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே அதிரடி தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளார். அந்தத் தீர்மானத்தில், ராகுல் காந்தி நாட்டைத் தவறாக வழிநடத்துவதாகவும், இந்தியாவிற்கு எதிராகச் செயல்படும் வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் நிஷிகாந்த் துபே வலியுறுத்தியுள்ளார். இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்": மத்திய அரசைச் சீண்டிய ராகுல் காந்தியின் உரை
முன்னதாக நேற்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளை மிகக் கடுமையாகச் சாடினார். உலகம் போர்ச் சூழலில் இருக்கும் நிலையில், இந்தியத் தரவுகளையும் (Data) மக்களையும் அமெரிக்காவின் நலனுக்காக மத்திய அரசு அடகு வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். "அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தியாவை விற்றுவிட்டீர்கள், இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பிய அவர், "நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவையே விற்றுவிட்டீர்கள்" என ஆவேசமாகத் தெரிவித்தார். இந்தியத் தரவுகள் தான் நாட்டின் மிகப்பெரிய சொத்து என்றும் அதை அரசு தவறாகக் கையாளுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதானி மற்றும் எப்ஸ்டீன் விவகாரம்: ராகுல் காந்தியின் பகிரங்கக் குற்றச்சாட்டு
மத்திய அரசு ஏன் இத்தகைய முடிவுகளை எடுக்கிறது என்பதற்கு ராகுல் காந்தி இரண்டு முக்கிய காரணங்களை முன்வைத்தார். தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்காவின் வழக்கு மற்றும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ (Epstein Files) ஆகியவை மூலம் பிரதமரின் "கழுத்தைப் பிடித்திருப்பதாக" அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
எப்ஸ்டீன் விவகாரத்தில் சுமார் 30 லட்சம் கோப்புகள் வெளியாகியுள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள மிரட்டல்கள் காரணமாகவே இந்தியா விற்கப்படுவதாக அவர் கூறியது சபையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராகுலின் இந்தப் பேச்சே தற்போது அவருக்கு எதிரான தகுதிநீக்கத் தீர்மானத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
