கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. தன்னை ராமநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபர், தான் ஒரு ஜோதிடர் என்றும் தனக்குச் சில ரகசிய பூஜைகள் செய்யத் தெரியும் என்றும் அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும், தான் செய்யப்போகும் ஒரு விசேஷ பூஜைக்குப் பெண்ணின் நிர்வாணப் புகைப்படம் தேவைப்படுவதாகக் கூறி அந்தப் பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
விசித்திர நிபந்தனையும் பண ஆசையும்
அந்த நபர் இளம்பெண்ணிடம் பேசும்போது, பூஜைக்குத் தேவையான புகைப்படம் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும் என்றும், உடலில் எங்கும் மச்சம் இருக்கக்கூடாது என்றும் விசித்திரமான நிபந்தனைகளை விதித்துள்ளார். மச்சம் இருந்தால் பூஜை பலிக்காது என்று கூறிய அவர், இளம்பெண்ணின் புகைப்படத்தைத் தனது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், புகைப்படத்தை அனுப்பினால் பிரதிபலனாக 30 லட்சம் ரூபாய் பணம் தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி ஒரு மாத காலமாகத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
காவல்துறையில் புகார் மற்றும் தேடுதல் வேட்டை
அந்நபரின் தொடர் வற்புறுத்தல் மற்றும் ஆபாசமான பேச்சுகளால் அந்தப் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கிரண் என்ற பெயரில் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசிய அந்தப் போலி ஜோதிடரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஜோதிடம் என்ற பெயரில் இளம்பெண்ணை ஆபாசப் படம் கேட்டு மிரட்டிய இந்தச் சம்பவம் பெங்களூரு பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
