மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில், நர்மதை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பார்கி அணையில் நிகழ்ந்த கோரமான படகு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி மாலை, சுமார் 30 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு, பலத்த காற்று காரணமாக நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், திருச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ் என்பவர், ஜபல்பூர் பாதுகாப்புத் துறை வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். கோடை விடுமுறைக்காக திருப்பூரிலிருந்து வந்திருந்த உறவினர்களுடன் பார்கி அணைக்குச் சுற்றுலா சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில் காமராஜ், அவரது மனைவி கார்குழலி, மகன் தமிழ்வேந்தன் மற்றும் உறவினர்களான சவுபாக்கியம், மயூரன் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர். உறவினர் சிறுமி இனியாவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து நடந்தவுடன் மாநில பேரிடர் மீட்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு 24 பேரை மீட்டனர். இதில் 17 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியின் போது, டெல்லியைச் சேர்ந்த ஒரு தாய் தனது 4 வயது மகனை இறுக்க அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்டக் காட்சி அங்கிருந்தோரை நிலைகுலையச் செய்தது. பலியானவர்களின் உடல்களை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் தமிழகத்திற்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் மோசமான வானிலையே இந்த விபத்திற்கு முதன்மை காரணமாகக் கருதப்படுகிறது.
