அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒருமித்த கருத்தை வெளியிட்டுள்ளன. மொத்தம் 126 இடங்களைக் கொண்ட அசாம் பேரவைக்கு கடந்த 9-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 2016 மற்றும் 2021-ல் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து பாஜக மீண்டும் பலம் வாய்ந்த நிலையில் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, ஆக்ஸிஸ் மை இந்தியா கணிப்பின்படி பாஜக கூட்டணி 88 முதல் 100 இடங்களைக் கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் வெறும் 27 இடங்களோடு சுருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் - ஜேவிசி கணிப்பும் பாஜக கூட்டணிக்கு 101 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
வெற்றி இலக்கும் அதிகாரப்பூர்வ முடிவுகளும்
மாட்ரிஸ் நிறுவனத்தின் ஆய்வில் பாஜக கூட்டணி 85 முதல் 95 இடங்களைப் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் 25 முதல் 32 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பீபிள்ஸ் பல்ஸ் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 68 முதல் 72 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அசாமில் ஆட்சி அமைக்க 64 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமான நிலையில், அனைத்து முக்கியக் கணிப்புகளும் பாஜக அந்த இலக்கை எளிதாகக் கடக்கும் என்றே தெரிவிக்கின்றன. இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வரும் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அம்மாநில அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது.
