அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மா, தன் மீதான ஊழல் புகார்கள் மற்றும் விசாரணையைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "மிகுந்த மனவேதனையுடன் இந்தப் பதவியிலிருந்து உடனடியாக விலகுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இவர் பணியாற்றியபோது, இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது கட்டுக்கட்டாகப் பணம் எரிந்து சாம்பலாகிக் கிடந்தது தீயணைப்புத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நியமித்த விசாரணைக் குழு, வர்மாவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து அவரைப் பதவி விலகுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தியும் அவர் மறுத்து வந்தார். பின்னர், வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தலைமை நீதிபதி கடிதம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாரான நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா தற்போது தாமாகவே முன்வந்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார்.
