தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது எதுவாக இருந்தாலும், அக்குழந்தையை அரவணைக்கும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு எடுக்கும் உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையைத் தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால விடுப்பு வழங்கப்படும் என்ற நிபந்தனை இருந்தது. இந்த விதியை எதிர்த்து வழக்கறிஞர் ஹம்சா நந்தினி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, அந்த நிபந்தனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அதனை ரத்து செய்து உத்தரவிட்டது.
தந்தையர்களுக்கும் விடுப்பு வழங்க அறிவுறுத்தல்
குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பை உருவாக்குவதில் குழந்தையின் வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று தனது தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஒரு குழந்தையை வளர்ப்பதில் தந்தையின் பங்களிப்பும் மிக முக்கியமானது என்பதால், தாய்மார்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பைப் போலவே, தந்தைக்கான விடுப்பையும் (Paternity Leave) ஒரு சமூகப் பாதுகாப்புச் சலுகையாக அங்கீகரிக்கும் வகையில் புதிய சட்ட விதிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு தத்தெடுக்கும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
