தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க போராடி வரும் நிலையில் விசிக அதிகாரத்தில் பங்கு கேட்டு துணை முதல்வர் பதவியை நிபந்தனையாக முன்வைத்துள்ளதாகத் சொல்லப்படுகிறது. இந்த கோரிக்கையை விஜய் ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக-வின் இந்த புதிய நகர்வு தமிழக அரசியலில் ஒரு மாற்றத்திற்கான தொடக்கமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தற்போது நிலவும் தொங்கு சட்டசபை நிலைமை, மாநில அரசியலை உச்சக்கட்ட பரபரப்பிற்கு கொண்டு சென்றுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிலவரம் என்ன?
தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே தமிழக அரசியல் களம் ஒருவித இழுபறி நிலையிலேயே உள்ளது. பிரதானக் கட்சிகள் எதற்கும் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், கணிசமான இடங்களைக் கைப்பற்றி கிங் மேக்கர் இடத்தைப் பிடித்தது. அனால் தனித்து நின்று களம் கண்ட விஜய், தற்போது ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவைத் திரட்ட படாத பாடுப்பட்டு வருகிறார்.
திருமாவிடம் போனில் பேசிய விஜய்?
தவெக தலைவர் விஜய் திருமாவளவனிடம் போனில் பேசியதாக தகவல் வெளியான நிலையில், ஆதவ் திருமாவை நேரிலேயே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் பேரமே நடந்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைய ஆதரவு கோரப்பட்டதாக கூறப்படுகிறது.
துணை முதல்வர் பதவி
இந்தச் சந்திப்பின் போது, திருமாவளவன் தரப்பிலிருந்து ஒரு மிக முக்கியமான கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. "ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதை விட, ஆட்சியதிகாரத்தில் நேரடிப் பங்கு வேண்டும்" என்பதில் உறுதியாக இருக்கும் விசிக துணை முதல்வர் பதவியைக் கோரியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது விஜய் ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என தவெகவிடம் டீல் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை முன்வைத்த விசிகவுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
"தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய, வெறும் அமைச்சர் பதவிகள் மட்டும் போதாது, அதிகாரமிக்க துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டால் மட்டுமே தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கப்படும் என சில நிபந்தனைகள் வைத்துள்ளதாக விசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் முடிவு என்ன?
தற்போது பந்து விஜய்யின் பக்கத்தில் உள்ளது. துணை முதல்வர் பதவியை விசிகவுக்கு வழங்கத் தவெக சம்மதித்தால், அது தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக அமையும் எனவும் அதே சமயம், மற்ற கூட்டணிக் கட்சிகள் மற்றும் கட்சிக்குள்ளே எழும் விமர்சனங்களையும் விஜய் கையாள வேண்டியிருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில், விசிக தனது ஆதரவைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்க அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. மற்றொரு தரப்பு விஜய் ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்தால் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதாக தவெகவே திருமாவுக்கு ஆஃபர் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படப் போகிறதா அல்லது இந்த பேச்சுவார்த்தைகள் இழுபறியில் முடியுமா என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.
