தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுடன் பனையூர் தலைமையகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு ஆதரவாக இருந்தாலும், ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் தவெக 120 இடங்கள் வரை பிடித்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது.
தேர்தல் முடிவுக்கு பிந்தைய அரசியல் நகர்வுகளை முறியடிக்கும் விஜய்
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விஜய், கருத்துக்கணிப்புகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் தீர்ப்பு மீது நம்பிக்கை வைக்குமாறு வேட்பாளர்களைக் கேட்டுக்கொண்டார். வாக்கு எண்ணிக்கையின் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும், எவ்வித குளறுபடிகளும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே கையெழுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குறிப்பாக, வெற்றி பெற்றவுடன் வேறு யாருடைய அழைப்புக்கும் செவிசாய்க்காமல், எங்கும் தங்காமல் உடனடியாகப் பனையூர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிட்டார். இதன் மூலம் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற்பட வாய்ப்புள்ள ‘குதிரை பேர’ அரசியலை முன்கூட்டியே முறியடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
