தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று, பெரம்பூர் தொகுதியில் மனுத்தாக்கல் செய்துவிட்டுத் தனது பிரசாரத்தைத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது தற்போது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் அவர் மேற்கொண்ட பிரசாரத்தின் போது, தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, கொளத்தூர் பகுதியில் பரப்புரை செய்தபோது அனுமதி அளிக்கப்பட்ட 5 ஒலிப்பெருக்கிகளுக்குப் பதிலாக, சுமார் 30-க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்திப் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகத் தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
மேலும், உரிய அனுமதியின்றி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களைத் திரட்டியது மற்றும் அவசரத் தேவைகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது போன்ற காரணங்களுக்காகவும் அவர் மீது புகார்கள் குவிந்தன. இந்தத் தேர்தல் விதிமீறல் புகார்களின் அடிப்படையில், பெரவள்ளூர் காவல்துறையினர் விஜய் மீது 5 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வேட்புமனுத் தாக்கல் செய்த முதல் நாளிலேயே தவெக தலைவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.