வேங்கை வயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூக மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பலரிடம் டிஎன்ஏ பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோதிலும், இதுவரை உறுதியான முன்னேற்றம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
மேலும், குற்றவாளிகளை விரைவாக கண்டறிய வேண்டும் என்றும், இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், “மூன்று ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை; குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை” என்ற அதிருப்தி மற்றும் கோபத்தின் காரணமாக, வேங்கை வயல் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் தற்போதைய தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தல் அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
