புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு குழப்பமான நிலையில் இருப்பதாகக் விமர்சித்தார். அதேபோல், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்க முடியாமல் சோர்ந்து போயிருப்பதாகவும், தங்களுக்குள் ரகசிய உடன்படிக்கை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தவெக எந்தக் கட்சியுடனும் மறைமுக உறவு வைத்துக்கொள்ளவில்லை என்பது தற்போது தனித்துப் போட்டியிடுவதன் மூலம் நிரூபணமாகிவிட்டதாகவும், மக்கள் பக்கம் மட்டுமே தனது கட்சி நிற்பதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
புதுச்சேரி மக்களின் நீண்டகால கோரிக்கையான 'மாநில அந்தஸ்து' குறித்துப் பேசிய விஜய், கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸும் சரி, தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவும் சரி, இந்த விவகாரத்தில் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகச் சாடினார். 20 ஆண்டுகளுக்கு முன்பே வாக்குறுதி அளிக்கப்பட்டும் ஏன் இன்னும் அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், இதற்கு இரு கூட்டணிகளும் பதில் சொல்ல வேண்டும் என சவால் விடுத்தார். மேலும், புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்தின் வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தவெக ஆட்சி அமைய மக்கள் 'விசில்' சின்னத்திற்கு வாக்களித்து ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
