தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் காரைக்குடியில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக அவர் காரைக்குடி நோக்கிப் பயணித்த போது, திருமங்கலம் நெடுஞ்சாலையில் அவரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த ஏராளமான இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் பிரசார வாகனத்தைப் பின்தொடர்ந்து அதிவேகமாகச் சென்றனர். எதிர்பாராதவிதமாக, பின்னால் வந்த இளைஞர் ஒருவரின் வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தனது வாகனத்தைப் பின்தொடர வேண்டாம் என கட்சித் தலைமை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், ஆர்வ மிகுதியால் இளைஞர்கள் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே தஞ்சாவூர் பிரசாரத்தின் போது வாகனத்தைப் பின்தொடர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகளைத் தொடர்ந்து, தொண்டர்கள் தங்களது உயிரின் பாதுகாப்பைக் கருதி இத்தகைய சாகசங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.