தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேசிய செய்தித் தொடர்பாளரும், திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான சத்தியகுமார், கட்சி நிர்வாகிகளிடையே கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார். அண்மையில் தொகுதிக்கு வந்த அவர், தன்னைச் சந்திக்க வந்த நிர்வாகிகளைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த தவெக நிர்வாகிகள், சத்தியகுமாரை மாற்றிவிட்டு வேறொரு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தித் தேர்தல் பணிகளைப் புறக்கணித்து வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக, அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தனித்துச் சென்ற வேட்பாளர்
கட்சி மேலிட நிர்வாகிகளோ அல்லது மாவட்டச் செயலாளரோ கூட வராத நிலையில், சத்தியகுமார் நேற்று முன்தினம் தனி ஆளாகச் சென்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராகக் கொடி பிடிப்பதால், தொகுதியில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஆனாலும் மனம் தளராத வேட்பாளர், நேற்று திருத்தணி நகரின் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கட்சித் தொண்டர்கள் யாரும் இன்றித் தன்னந்தனியாகப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு
யாருடைய துணையும் இன்றி வீதிகளில் நடந்து சென்ற சத்தியகுமார், அங்குள்ள தேநீர் கடைகள், பெட்ரோல் பங்க் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்களைச் சந்தித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரினார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் படைசூழ நடக்க வேண்டிய பிரச்சாரம், வேட்பாளர் மட்டும் தனியாக மேற்கொண்டது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. உட்கட்சிப் பூசல் காரணமாகத் திருத்தணி தவெகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
