தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அக்கட்சியின் பெண் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் வீட்டு வாசல்களில் 'விசில்' சின்னத்தை வண்ணக் கோலங்களாக வரைந்து புதிய அரசியல் ட்ரெண்டை உருவாக்கி வருகின்றனர். தேர்தல் களத்தில் கட்சியின் சின்னத்தை மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிய வைக்க சுவர் விளம்பரங்கள் போன்ற வழக்கமான முறைகளைத் தாண்டி, தமிழர்களின் கலாசார அடையாளமான கோலத்தை விஜய் ஒரு பிரச்சாரக் கருவியாக மாற்றியுள்ளார். சென்னையில் நடந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், "அம்மாக்களும், சகோதரிகளும் உங்கள் வீட்டு வாசலில் விசில் சின்னத்தைக் கோலமாக இட்டு எனக்கு ஆதரவு தாருங்கள்" என்று விஜய் உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.
அவரது அழைப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகளின் வாசல்களில் 'விசில்' சின்னம் கோலமாக உருவெடுத்தது. பல இடங்களின் கோலங்களுக்குக் கீழே 'எங்கள் வாக்கு விசில் சின்னத்திற்கே' என்ற வாசகங்களுடன் பெண்கள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வித்தியாசமான பிரச்சார முறையின் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையில், பெரம்பூரில் உள்ள தேர்தல் பணிமனைக்குத் திடீர் வருகை தந்த விஜய், அங்குள்ள பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த பெண் நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களுடன் இணைந்து தரையில் அமர்ந்து 'விசில்' சின்னத்தைக் கோலமாக வரைந்து உற்சாகத்துடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
