சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இதற்காகப் பகல் 12 மணி முதல் மதியம் 2:30 மணி வரை மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. சென்னையில் இருந்து மதுரை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி நோக்கிப் புறப்பட்ட விஜய்க்கு வழியெங்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இடையில் அவர் சைக்கிளில் பயணம் செய்ததாலும், மக்கள் கூட்டத்தாலும் காரைக்குடி வந்தடையப் பெரும் தாமதமானது.
நிர்ணயிக்கப்பட்ட 2:30 மணி நேரத்தைக் கடந்து விஜய் பிரசார இடத்திற்கு வந்ததால், தேர்தல் விதிமுறைகளின்படி அவர் பேசுவதற்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால் மேடையில் பேச முடியாமல் போன விஜய், கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி ரோடு ஷோ மட்டும் நடத்தினார். பின்னர், தவெக வேட்பாளர் பிரபுவுக்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அனுமதி நேரம் முடிந்ததால் கட்சியின் தலைவர் பேச முடியாமல் போனது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியது.
