சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபைத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் கடைசி நேரத்தில் எடுத்துள்ள முடிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆதரவு
தவெக சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்ட வேட்பாளர் அருண் குமார் தாக்கல் செய்த வேட்புமனு, முன்மொழிந்தவர்களின் உறுதிப்படுத்தல் தொடர்பான குறைபாடுகளால் நிராகரிக்கப்பட்டது. இதனுடன், மாற்று வேட்பாளராக இருந்த அவரது மனைவி நித்யாவின் மனுவும் ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால், தவெக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லாத சூழல் உருவானது. இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பிரேம் குமாருக்கு ஆதரவு அளிப்பதாக விஜய் அறிவித்துள்ளார். மேலும் அவர் ‘தொலைக்காட்சி பெட்டி’ சின்னத்தில் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி தொகுதி
இத்தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய வேட்பாளராக உள்ளார். அவருக்கு எதிராக திமுக சார்பில் காசி மற்றும் நாம் தமிழர் கட்சியின் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
விஜய்யின் அறிக்கை
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரேம் குமார் தனது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாக செயல்பட்டவர். எனவே, அவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் முழுமையான ஆதரவை வழங்குகிறது,” என தெரிவித்துள்ளார்.
மேலும், “பிரேம் குமாரை தவெக வேட்பாளராக கருதி, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வரிசை எண் 12-இல் உள்ள ‘தொலைக்காட்சி பெட்டி’ சின்னத்தில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், கட்சி நிர்வாகிகள் மற்றும் எடப்பாடி தொகுதி வாக்காளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் பிரேம் குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
