சென்னை துறைமுகம் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான டோக்கன்கள் வழங்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ரவீந்திரன் தாக்கல் செய்த மனுவில், அதிமுக வேட்பாளர் மனோவுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த டோக்கன்களில் உள்ள க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னம் தோன்றுவதோடு, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அந்த டோக்கன்களை பயன்படுத்தி ரூ.10,000 பெறலாம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் வாக்காளர்களுக்கு பணம் மறைமுகமாக வழங்குவது மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாக கூறப்படுகிறது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, துறைமுகம் தொகுதியில் இதுபோன்ற க்யூஆர் கோடு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனை கருத்தில் கொண்டு நீதிபதிகள், விசாரணை நடைபெற்று வருவதால் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தனர். இதற்கிடையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
