அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் இந்த மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபாட் (VVPAT) கருவிகள் சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த செயல்முறை நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் சரியாக எண்ணப்படுகின்றனவா என்பதும் விரிவாக பரிசோதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 75,064 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதுடன், 5 கோடி 73 லட்சம் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தத் தயாராக உள்ளனர்.
மாதிரி வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில், சில வாக்குகள் பதிவு செய்து, அவை சரியாக இயந்திரத்தில் பதிகின்றனவா என்பதை அதிகாரிகள் உறுதி செய்கின்றனர்.
மாதிரி வாக்குப்பதிவின் போது ஏதேனும் கோளாறு கண்டறியப்பட்டால், உடனடியாக அந்த இயந்திரம் மாற்றப்பட்டு புதிய இயந்திரம் பயன்படுத்தப்படும். மேலும், இந்த பரிசோதனையில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பின்னர் அழிக்கப்படாமல் நினைவகத்தில் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நிமிடத்திற்கு அதிகபட்சம் ஐந்து வாக்குகள் மட்டுமே பதிவு செய்யும் வகையில் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாதிரி வாக்குப்பதிவு முடிந்ததும் ‘முடிவு’ (Result) பொத்தானை அழுத்தி, பதிவான வாக்குகள் சரியாக எண்ணப்படுகின்றனவா என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
அதன் பின்னர், வாக்குச்சாவடி தலைவர் முத்திரையுடன், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களின் கையொப்பமும் பெறப்பட்டு, முழு செயல்முறை உறுதிப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம், வாக்குப்பதிவு நேரத்தில் எந்தவித தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்படாதவாறு தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
