தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், பெரம்பூர் தொகுதியில் தனது மனுவைத் தாக்கல் செய்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அங்கிருந்தே தனது அதிரடி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். வடசென்னையின் அடையாளங்களாகத் திகழும் ஆன்மீகத் தலங்கள் நிறைந்த இப்பகுதியைத் தனது 'தாய் வீடு' எனக் குறிப்பிட்ட அவர், உழைக்கும் மக்கள் நிறைந்த இடத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்குவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் கடுமையாகச் சாடினார். சாமானிய மக்கள் டீக்கடைக்குச் சென்றால் கூடப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனை விடத் தனது குடும்பச் சொத்தைப் பெருக்குவதிலேயே குறியாக இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், நகராட்சி நிர்வாகத் துறை வேலைவாய்ப்புகளில் நடந்துள்ள ஊழல்கள் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று குறிப்பிட்ட விஜய், இந்தத் தேர்தலோடு முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக் கட்டிலில் இருந்து விடைபெறப் போவது உறுதி என ஆவேசமாகப் பேசினார். ஆளுங்கட்சியினர் ஓட்டுக்குக் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குப் பதிலாக 'விசில்' ஊதிப் பாடம் புகட்டுமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக 'ஜென் ஸீ' (Gen Z) இளைஞர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தனது 'விசில்' சின்னத்திற்கு வாக்களித்துத் தனக்கு ஒருமுறை வாய்ப்பளிக்குமாறு உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
