தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் இறங்குகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (NDA) இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் சென்னையில் போட்டியிட உள்ளனர். குறிப்பாக, தவெக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி குறித்த கருத்துக்கள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நியமனம் என அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன.
புதிதாக அரசியல் பிரவேசம் செய்தபோதிலும், தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தைத் தன்வசம் வைத்துள்ளவர் தவெக தலைவர் விஜய். இதன் காரணமாக வாக்குகள் சிதறக்கூடும் என்றும், கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது என்றும் பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. தவெக நிர்வாகிகள் பலர் கூட்டணி வைப்பதே சரி என்று கூறிய போதிலும், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் சென்னை மாவட்டத்திலேயே போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், என். ஆனந்த் தி.நகர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். அதேபோல் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவும், ஆர்.கே.நகர் தொகுதியில் மரியா வில்சனும் களம் காண்கின்றனர். மேலும் மயிலாப்பூர் தொகுதியில் வெங்கட்ராமனும், ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜெ.சி.டி. பிரபாகரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்யின் இந்த அதிரடித் தொகுதி ஒதுக்கீடு மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
