பிரபல நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், சென்னை தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடி மையத்தில் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். ஜனநாயகக் கடமையை ஆற்றிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய தேர்தல் அரசியல் மற்றும் பணநாயகம் குறித்துத் தனது பாணியில் அடுக்குமொழியில் விமர்சனங்களை முன்வைத்தார்.
மக்களின் கரத்தை விட கரன்சிக்கே முக்கியத்துவம்
இந்தத் தேர்தலைத் தான் எவ்வாறு பார்க்கிறேன் என்பதை விளக்கிய டி.ராஜேந்தர், "வாக்குகள் பிரிவதையும், சிலரது அரசியல் செல்வாக்கு சரிவதையும் காண முடிகிறது; அதே சமயம் மக்கள் மனதிற்குள் ஏதோ ஒரு ஆதங்கம் நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கிறது" என்று கவித்துவமாகத் தெரிவித்தார். இன்றைய அரசியல் சூழலில் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ வெற்றி பெறுவதற்குச் சுமார் 20 கோடி ரூபாய் முதல் 110 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுவதாக அவர் வேதனை தெரிவித்தார். பதவியில் இருப்பவர்கள் பல லட்சம் கோடிகளைக் குவித்து வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், இன்றைய அரசியல்வாதிகள் மக்களின் கரங்களை நம்புவதை விட, அவர்களிடம் இருக்கும் கரன்சிகளை (பணம்) மட்டுமே வெற்றிக்காக நம்பி இருப்பதாகக் கடுமையாகச் சாடினார்.
