பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மீது மிகக் கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துத் தொண்டர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் அனுபவித்து வரும் வேதனையை விவரித்துள்ள அவர், தனது கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு அன்புமணி பணத்திற்காக அலையத் தொடங்கியபோதே ஒரு தந்தையாக தான் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சமுதாயத்தின் உரிமைகளை அடகு வைத்து, ஒவ்வொரு தேர்தல் இடத்தையும் கோடிக்கணக்கில் விற்பனை செய்து 'சமூக நீதி வியாபாரம்' நடத்துவதாக அவர் சாடியுள்ளார்.
குடும்ப அரசியலும் துரோகமும்
அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், மறைந்த முதல்வர் கருணாநிதியை அவர் இறக்கும் வரை ஸ்டாலின் கவனித்துக் கொண்டதையும், தற்போது உதயநிதி தன் தந்தையை கௌரவப்படுத்துவதையும் சுட்டிக்காட்டிய ராமதாஸ், தனக்கு வாய்த்த பிள்ளையோ தான் உயிரோடு இருக்கும்போதே தன்னைச் செத்துப்போனதாகக் கருதி அரசியல் செய்வதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். பெற்ற தந்தையையே மதிக்காத ஒருவர், சாதாரணப் பாட்டாளி மக்களுக்கோ அல்லது பெண்களுக்கோ எந்த நன்மையும் செய்யப்போவதில்லை என்றும், தருமபுரியில் சவுமியா வெற்றி பெற்றால் அந்த பூமி அதர்மபுரியாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மாம்பழச் சின்னத்திற்கு எதிராக வேண்டுகோள்
மாம்பழச் சின்னத்திற்குள் இப்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டதாகக் குறிப்பிட்ட ராமதாஸ், அந்தச் சின்னத்தை இனி நம்ப வேண்டாம் என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அன்புமணியின் ஆதரவாளர்களுக்கு வாக்களிப்பது ஒருவரது சொந்தத் தந்தையின் தலையில் மண்ணள்ளிப் போடுவதற்குச் சமம் என்று கூறிய அவர், அன்புமணி போட்டியிடும் 18 தொகுதிகளிலும் அவரது அணியினரைத் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். "ராமதாஸ் தோற்கலாம், ஆனால் துரோகம் ஒருபோதும் ஜெயிக்கக் கூடாது" என்று கூறி, தர்மம் வெல்லத் தொண்டர்கள் தனக்கு மருந்தாக இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
