புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ரங்கசாமி 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தொடக்கம் முதலே முன்னிலை வகித்த அவர், இறுதிச் சுற்றின் முடிவில் 10,024 வாக்குகளைப் பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார். இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நேயம் மக்கள் கழகத்தின் வேட்பாளர் விநாயகம் 5,583 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சுயேச்சை வேட்பாளர் சேதுசெல்வம் 3,884 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்த நிலையில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் வெறும் 2,990 வாக்குகளை மட்டுமே பெற்று நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் கார்த்திக் குமாரி 534 வாக்குகளையும், நோட்டா 196 வாக்குகளையும் பெற்றிருந்தன.
அன்பழகன் வெற்றியால் அதிமுக உற்சாகம்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவிய அதிமுக, இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான உப்பளத்தில் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. உப்பளம் தொகுதியில் பதிவான வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் 9,008 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சிவா 7,826 வாக்குகளையும், திமுகவின் அனிபால் கென்னடி 5,320 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் 1,182 வாக்குகள் வித்தியாசத்தில் அன்பழகன் வெற்றி பெற்று, புதுச்சேரி சட்டமன்றத்தில் அதிமுகவின் பிரதிநிதித்துவத்தை மீண்டும் உறுதி செய்துள்ளார்.
