புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்கத்திலிருந்தே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி சுமார் 17.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகளுக்கிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக மாநில அந்தஸ்து உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு மற்றும் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
வாக்குப்பதிவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில், புதுச்சேரி மக்கள், குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற அதிக அளவில் திரண்டு வர வேண்டும் என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, திலாசுப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச்சாவடிக்குத் தனது இருசக்கர வாகனத்தில் வந்து வாக்களித்தார். அப்போது புகைப்படக் கலைஞர்களைப் போலீஸார் அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு வந்து வாக்களித்ததாகத் தெரிவித்தார். மேலும், மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
