தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மகன்களுடன் வருகை தந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் கள நிலவரம் மற்றும் கூட்டணி வெற்றி வாய்ப்புகள் குறித்து உற்சாகமாகப் பேசினார்.
தேர்தல் வெற்றிக் கணிப்பும் ஜனநாயகக் கடமையும்
வாக்களித்த பிறகு பேசிய பிரேமலதா, தமிழகத்தில் தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி என்று குறிப்பிட்ட அவர், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தங்களது கூட்டணி வெற்றி பெறும் எனத் தனது கணிப்பை வெளியிட்டார். மக்களுக்குத் தங்கள் மீது பெரிய அளவில் ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார். சென்னையில் வாக்களித்துவிட்டுத் தான் போட்டியிடும் விருத்தாச்சலம் தொகுதிக்கும், மகன் விஜய பிரபாகரன் அவர் போட்டியிடும் விருதுநகர் தொகுதிக்கும் செல்லவிருப்பதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, முதல்முறை வாக்களிக்க வந்திருக்கும் இளைஞர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தில் கிடைத்த உரிமையைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் என்பதால், தங்கள் மனசாட்சிக்குச் சரியான வேட்பாளருக்குத் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், யாரும் வாக்களிக்காமல் இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
