தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வேட்புமனுத் தாக்கல் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் பெரும் பரபரப்புடன் நடைபெற்று வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இடைப்பட்ட 8 நாட்களில் 4 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள் என்பதால், எஞ்சியுள்ள 4 நாட்களில் மட்டுமே வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உட்பட அதிகபட்சமாக 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுத் தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வரும்போது, அதிகபட்சமாக 3 வாகனங்கள் வரை மட்டுமே அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். நாளை முதல் மாநிலம் தழுவிய தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் முதல் நாளிலேயே அவர் மனுத் தாக்கல் செய்வது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
