தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் பட்டியலில் இடம் பெறாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், வேட்பாளர் தேர்வு என்பது அகில இந்தியத் தலைமை எடுத்த முடிவு என்றும், மேலிடம் இட்ட கட்டளையைத் தாங்கள் ஏற்றுச் செயல்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 27 வேட்பாளர்களும் வெற்றி பெற்றுச் சட்டமன்றத்திற்குச் செல்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, தேர்தலில் போட்டியிடாதது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, அறிவிக்கப்பட்டுள்ள பாஜக வேட்பாளர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் தலைமையில் தேசம் முன்னேறி வரும் வேளையில், திமுக அரசால் தமிழகம் பின்தங்கியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்பதே இலக்கு என்றும், அந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தத் தான் வேட்பாளர்களுடன் தோளோடு தோள் நின்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாகவும் அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
