தன்னுடைய உயிருக்கும், தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் தான் முழுப் பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 2021 தேர்தலின் போதே தன்னை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், தேர்தலில் தான் தோல்வியடைந்ததால் மட்டுமே உயிர் தப்பியதாகவும் கூறினார். மதுரையிலிருந்து ரவுடிகளை வரவழைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதுடன், தன் மீது ஆசிட் வீசவும் முயற்சி நடந்ததாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டார். தனது பாதுகாப்பு குறித்து ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், தற்போது துப்பாக்கி உரிமம் மறுக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நில விவகாரம்
தொடர்ந்து தனது தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்ட அவர், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமராவதி ஆற்றில் உயர்மட்ட பாலம், கரூரில் புதிய சட்டக் கல்லூரி மற்றும் அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்றார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் அவர் முன்மொழிந்தார். கோயில் இனாம் நில விவகாரத்தில் தான் யாரையும் தூண்டிவிடவில்லை என்று விளக்கம் அளித்த அவர், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்திலேயே இது தொடர்பான வழக்குகள் நடைபெற்றதைச் சுட்டிக்காட்டினார். இலவசமாகப் பட்டா தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வாக்கு பெற்றுவிட்டு, தற்போது பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபடுவதாக அவர் சாடினார். வரும் தேர்தலில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
