தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மக்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்பதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகம் பல இடங்களில் முன்னிலை பெற்று வரும் சூழலில், அக்கட்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ள மு.க. ஸ்டாலின், வெற்றி பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துகளைக் கூறிக்கொண்டார். கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறந்த ஆட்சியை வழங்கியதாகவும், தேர்தல் களத்தில் அந்தச் சாதனைகளை முன்வைத்தே தாங்கள் வாக்கு கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கைப் பயணம் தொய்வின்றித் தொடரும்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ள அவர், வாக்களித்தவர் மற்றும் வாக்களிக்காதவர் என அனைவருக்கும் பொதுவான ஆட்சியைத் தான் நடத்தியதாகக் கூறினார். தனது மனச்சாட்சிக்கு உண்மையாக, சக்தியை மீறி உழைத்ததாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், களத்தில் தன்னுடனேயே நின்ற கட்சித் தொண்டர்களுக்கும் கூட்டணி இயக்கத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தனது நீண்ட கால அரசியல் வாழ்வில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்திருப்பதாகக் கூறிய அவர், வெற்றி-தோல்விகளை விட இலட்சியமும் கொள்கையுமே முக்கியம் என்பதை உணர்ந்திருப்பதாகத் தெரிவித்தார். இதனால் திமுகவின் அரசியல் பயணம் எவ்விதத் தொய்வும் இன்றித் தொடரும் என்றும், இதுவரை சிறந்த ஆளும் கட்சியாக இருந்த திமுக, இனி சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
